பிரபல நகைச்சுவை நடிகர் ‘போண்டா மணி’ காலமானார் அவருக்கு வயது 60. தமிழ் சினிமாவில் பலருக்கும் அறிமுகமான போண்டாமணி இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர். இவர் 1990 ஆம் ஆண்டு பாக்யராஜின் ‘பவுனு பவுனுதான்’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.
ரஜினிகாந்த் நடித்த ‘முத்து’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் போண்டாமணி தலைகாட்டி இருந்தாலும், நடிகர் விவேக்குடன் இணைத்து நடித்து தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். அத்துடன் வடிவேலுவுடன் இணைந்து வின்னர், வசீகரா, சச்சின் போன்ற படங்களிலும் காமெடியில் கலக்கினார். குறிப்பாக ‘கண்ணும் கண்ணும்’ படத்தில் “போலீஸ் வந்து அடித்து கேட்டாலும் சொல்லாதீங்க” என வடிவேலுவிடம் இவர் கூறும் காட்சி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

தொடந்து பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் கலை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வந்த போண்டாமணி கொரோனா காலத்தில் சிறுநீரக பிரச்சனையால் அவதியுற்றார். தீவிர சிகிச்சை எடுத்து பின் ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.
இன்று வீட்டில் மயங்கி விழுந்தவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

நடிகர் போண்டாமணியின் உடல் சென்னை பல்லாவரத்தை எடுத்த பொழிச்சலூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.பொது மக்கள் அஞ்சலி முடிந்த பின்னர் இன்று உடல் அடக்கம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.