இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய சில படங்களில்
உதவி இயக்குனராகப் பணியாற்றிய ஷங்கர், ஏதாவது ஒரு நடிகருக்குப் பதிலாக தன் தலையைக் காட்டிவிட்டுச் செல்வார். இதை எஸ்.ஏ.சந்திரசேகரும் அங்கீகரித்தார். அடிப்படையில் ஷங்கருக்குப் படம் இயக்கும் எண்ணமோ, ஆர்வமோ இருந்ததில்லை. முன்னணி நடிகராக வேண்டும் என்ற கனவில்தான் திரைத்துறைக்கு வந்தார். ஆனால், முன்னணி இயக்குனரான பிறகு ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, தனது ஒவ்வொரு படத்தையும் ஹிட்டாகியே தீர வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.
எனவே, டைரக்ஷனில் மட்டுமே அதிக கவனம் செலுத்திய ஷங்கர், தனது படங்களில் மட்டும் அவ்வப்போது தலைகாட்டி வந்தார். இதுவரை அவரைப் பற்றி வெளியே அதிகம் பகிரப்படாத செய்தி என்னவென்றால், ஷங்கர் ரொம்ப ஜாலியான டைப். நிறைய ஜோக்குகள் சொல்லி சிரிக்க வைப்பார்.


அதே நேரத்தில், இனிமையாகவும் பாடுவார். குறிப்பாக, மறைந்த டி.எம்.சவுந்தர்ராஜன் குரலில் அவர் பாடுவதை வீட்டிலும், அலுவலகத்திலும் கேட்டு ரசிக்கலாம். எப்படியோ இந்த விஷயத்தை தெரிந்துகொண்ட அவரது ஆஸ்தான இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது இசையில் ஒரு பாடலைப் பாடியே ஆக வேண்டும் என்று ஒற்றைக்காலில் தவம் செய்தார். ஆனால், அதிக கூச்சத்தின் காரணமாக ஷங்கர் மறுத்துவிட்டார். எனினும், அவர் இயக்கிய ‘காதலன்’படத் துக்காகஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த பேட்டை ராப் பாடலில், ‘பேட்ட ராப்’ என்ற வரிக்கு குரல் கொடுத்திருந்தார் ஷங்கர்.
அவரைப் பற்றி இன்னொரு தகவல். முதன்முதலில் தான் படம் இயக்குவதாக இருந்தால், மென்மையான காதல் கதை கொண்ட ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று ஒரு கதை எழுதி வைத்திருந்த ஷங்கர், அர்ஜூன் நடித்த ‘ஜென்டில்மேன் படம் ஹிட்டான பிறகு அக்கதையை ஓரமாக வைத்துவிட்டார்.