துளசி இலை
துளசிச்செடியை அனைவரும் அறிவர். புனிதமான முறையில் மக்கள் இதனைப் போற்றுகின்றனர். வீடுகளில் மட்டுமன்றி ஆலயங்களிலும் இச்செடியைப் பயன்படுத்துகின்றனர். துளசிக்கு நோய் தீர்க்கும் சக்தி அதிகம். இது விஷக் இருமியைப் போக்கும் தன்மையுள்ளது.
துளசியில் படிந்து வரும் காற்று ஆரோக்கியத்தையும், தீர்க்காயுளையும் கொடுக்குமென மக்கள் நம்புகின்றனர். துளசியில் கருந்துளசி, இலட்சுமித்துளசி என்று இருவகையுண்டு, கருந்துளசியின் இலைகளும், காம்பும் கருமை கூடியதாயிருக்கும். இலட்சுமித் துளசி பசுமையாக இருக்கும்.

இதன் குணம்:-
- கபநோய்கள் நீக்கும்.
- வயிற்றுழைச்சல் போக்கும்
- சுரமாந்தம் நீக்கும்.
- இருமல் நீக்கும்.
- சருமநோய்களைப் போக்கும்.
- பித்தசுரம் தீர்க்கும்
- பித்தம் நீங்கும்.
துளசியின் காற்றைச் சுவாசிப்பதால் சளி, இருமல் போன்ற சீதள நோய்கள் நீங்கும். பச்சிளம் குழந்தைகளுக்கு கஸ்தூரி மாத்திரை கொடுக்கும்போது துளசிச் சாற்றில் கலந்து கொடுப்பது வழக்கம். துளசிச்சாற்றினைச் சிறிது சூடுகாட்டி தேன் கலந்து கொடுத்தால் இருமல், சளி, தொண்டைக்கரகரப்பு போன்ற நோய்கள் குணமாகும்.
துளசிச்சாறு சுரத்தின் கடுமைமைத் தணிக்கும். துளசிச்சாற்றையும், ஆடா தோடை இலைச் சாற்றையும் கலந்து இரண்டு மூன்று வேளை உட்கொண்டால் சலதோஷம் நீங்கும்.
துளசிச்சாறு குழந்தைகளின் வயிற்று நோவைத் தீர்க்க வல்லது, துளசியை எலுமிச்சம்பழச்சாற்றில் அரைத்துப் பூசினால் படை போன்ற சரும நோய்கள் குணமாகும்.

துளசிச்சாற்றில் தேனைக் கலந்து கண்மையாக உபயோகிப்பர். கண்நோய்களையும் இது குணமாக்கும். வெள் உள்ளியைப் பிழிந்து துளசிச் சாற்றுடன் கலந்து காதில் விட்டால் காது சம்பந்தமான நோய்கள் நீரும்.
துளசிப் பூ, காம்புகள், சுக்கு ஆகியவற்றை அரைத்து அந்தச் சாற்றில் தேனையும் கலந்து கொடுத்தால் பாம்புக்கடி விஷம் முறியும். துளசி விதைகளை அரைத்து உட்கொண்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்.
துளசி இலை , பூ,காம்பு, வேர் அனைத்துமே மருத்துவப் பயன்பாட்டுக்குரியன. வீடுதோறும் இதனை வளர்ப்பது அவசியமாகும்.