பிச்சைக்காரன் -2
‘பிச்சைக்காரன்- 2’ படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் படத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
பிச்சைக்காரன் படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த ராஜகணபதி என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில் தங்களது தயாரிப்பு நிறுவனம் நடிகர் R.பாண்டியராஜன் நடிப்பில் ஏற்கனவே ஆய்வுக்கூடம் என்ற படத்தை தயாரித்து கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படத்தின் கதையை தங்களின் அனுமதியின்றி அப்படியே காப்பி அடித்து விஜய் ஆண்டனி நடிப்பில் படத்தை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்க்கு நஷ்ட ஈடாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

படத்தின் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆய்வுக்கூடம் படம் குறித்த எந்த தகவலும் தமக்கு எதுவும் தெரியாது எனவும், அந்த படத்தை தாம் பார்த்தது கூட இல்லை எனவும் வழக்கு தொடரப்பட்ட பின்னரே அந்த படத்தை பார்த்ததாகவும், பிச்சைக்காரன்-2, படத்திற்கும் ஆய்வுக்கூடம் படத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் விஜய் ஆண்டனி சார்பில் பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி எஸ் சௌந்தர் பிறப்பித்துள்ள உத்தரவில் பிச்சைக்காரன்-2 படத்தை வெளியிட அனுமதி அளித்தார். அதே வேளையில் படத்தை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை ஆடிட்டர் சான்றிதழ் உடன் 60 நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.